நாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு - நாமக்கல் அருகே பரிதாபம்

நாமக்கல்லில் தீபாவளி கொண்டாடத்தில் நாட்டு வெடி வெடித்ததில்‌ ஏழாம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழ‌ந்தார்.


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வடுகபட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன, சாந்தா லட்சுமி தம்பதியினரின் மகன் மணிவேல். 7-ம் வகுப்பு படித்து வரும் இவர் இன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது நண்பர்கள் சூர்யா, வசந்த் ஆகியோருடன் பட்டாசு வெடித்து வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் நாட்டு வெடிகளை நிலத்தில் புதைத்து வெடித்ததாக தெரிகிறது.


அதில் ஒரு வெடி வெகுநேரமாக வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை சென்று பார்த்த போது திடீரென வெடி வெடித்துள்ளது. இதில் மணிவேலின் மார்பு பகுதியிலும், சூர்யா மற்றும் வசந்த ஆகியோரின் உடல் பாகங்களிலும் வெடி பட்டு படுகாயமடைந்தனர். இதனையடுத்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.


இதில் மணிவேல் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியே உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த சூர்யா, வசந்த் ஆகிய இருவரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Powered by Blogger.