விஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்!

நியூசிலாந்து ஏ அணியுடனான போட்டியில் இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.


இந்திய ஏ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு, ஏ அணிகளுக்கு இடையிலான அதிகார பூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மவுன்ட் மாங்கானுயில் நேற்று தொடங்கியது.


இதில் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்ப யணம் செய்து கிரிக்கெட் விளையாட உள்ளது. அதற்கான பயிற்சி ஆட்டமாக கருதி இதில் அவர்கள் இணைந்துள்ளனர்.


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிருத்வி ஷா 62 ரன்கள் சேர்த்தார். அவருடன் விளையாடிய முரளி விஜய் 28 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.


மயங்க் அகர்வால் 65 ரன்களும் ஹனுமா விஹாரி 86 ரன்களும் சேர்த்தனர். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் சிறப்பாக விளையாடினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த விஜய் சங்கர் 62 ரன்கள் எடுத்தார்.


நியூசிலாந்து ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிக்னர் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய அந்த அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன் கள் எடுத்து ஆடி வருகிறது.

Powered by Blogger.