எந்திரன் கதை திருட்டு விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு - தப்பிய தயாரிப்பாளர் சிக்கிய ஷங்கர்


ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம், கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்தது. இது ஹாலிவுட்டில் வெளிவந்த ரோபோ படத்தின் சாயலில் உருவான படம். மனிதனால் உருவாக்கப்படும் எந்திர மனிதன், ஒரு கட்டத்தில் மனிதனையே ஆட்டிப்படைக்கிற கதை.

இந்த படத்தின் கதை என்னுடயது. நான் எழுதிய ஜூகிபா என்ற கதையை தழுவி படம் எடுத்துள்ளனர், என்று பிரபல எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை எழும்பூர் 13வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கரும், படத்தின் தயாரிப்பாளரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: வழக்கு தொடுத்துள்ள தமிழ் நாடனின் ஜூகிபா கதைக்கும், எந்திரன் படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் காப்புரிமைச் சட்டப்படி இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு தொடுக்க போதிய முகாந்திரம் உள்ளது. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான 420வது பிரிவின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

படத்தின் தயாரிப்பாளருக்கும், கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஷங்கர் பிரபலமானவர் என்பதால் அவர் கோர்ட்டில் ஆஜராகும்போது கூட்டம் கூடும். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கும் என்பதால் அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.
Powered by Blogger.